சந்திரகிரகணம் 10 மணிநேரம் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்: காத்திருந்த பக்தர்கள்
திருப்பதி: முழு சந்திரகிரகணம் ஏற்பட்டதை ஒட்டி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் 10 மணிநேரம் மூடப்பட்டது.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்காண பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவம் நிறைவடைந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக கூட்டம் குறைவாக இருந்தது. கடந்த 7ஆம் தேதி செவ்வாய்கிழமை 75000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

சுப்ரபாத சேவை
ஏழுமலையானுக்கு நாளை காலை சுப்ரபாத சேவை, தோமாலை அர்ச்சனைக்கு பிறகு 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 3 மணி முதல் 10 மணிவரை 13000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நடை அடைப்பு
சந்திரகிரகணத்தை ஒட்டி காலை 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. நேற்று பிற்பகல் முதல் இரவு வரை முழு சந்திரகிரகணம் நீடித்தது.

வெறிச்சோடிய கோவில்
கோவிலின் முக்கிய வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் எப்போதும் பக்தர்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

காத்திருந்த பக்தர்கள்
இதனையடுத்து தங்கும் அறைகளிலும், வெளியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னரே ஊருக்கு திரும்புவோம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

பரிகார பூஜைகள்
கிரகணத்தை ஒட்டி 10 மணி நேரம் மூடப்பட்டிருந்த கோவில் இரவு 8 மணிக்கு திறக்கப்பட்டு கோவில் தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர் பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அன்னதானம் நிறுத்தம்
எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கோவிலில் அன்னதானமும் நிறுத்தப்பட்டது. சந்திர கிரகணத்தின்போது சமைக்க கூடாது என்பதால் அன்னதானம் நிறுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின்னர் கிரகணம் முடிந்த உடன் சுத்தம் செய்யப்பட்டு சமையல் நடைபெற்றது. பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டனர்.

காளஹஸ்தியில் பூஜை
இதேபோல் ஆந்திராவில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் கிரகணத்தின்போது மூடப்பட்டது. ஆனால் காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் ராகு கேது பரிகார தலம் என்பதால் இங்கு கிரகண கால பூஜை நடைபெற்றது.

பழனியிலும் பரிகாரம்
இதேபோல் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பழனி முருகன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டு பின்னர் பரிகாரம் செய்யப்பட்ட பின்னர் நடை திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications