மகள் மீது பலாத்கார முயற்சி: நடவடிக்கை எடுக்காத போலீஸை கண்டித்து தந்தை தற்கொலை
லக்னோ: மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியில் வசிக்கும் மைனர் சிறுமியை சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பல் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதுகுறித்து காவல்துறையிடம் அச்சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மனமுடைந்த சிறுமியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சிறுமியின் தாய் இதுபற்றி கூறுகையில், காவல்துறை மட்டுமல்லாமல், உள்ளூர் பஞ்சாயத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கவும் யாரும் தயாராக இல்லை.
நாங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதுபோன்ற வேறுபாடு காண்பிக்கப்படுகிறது. எனது கணவன் சாவுக்கு இவர்கள்தான் காரணம். எனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.