தாவூத் இப்ராஹிம் கராச்சியில் தான் உள்ளார்: ஐரோப்பிய உளவு நிறுவனம் தகவல்
டெல்லி: நிழல் உலக தாதாவும் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியுமான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பதுங்கி இருப்பதை ஐரோப்பிய உளவு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். 20 ஆண்டுகாலமாக இந்திய அரசால் தேடப்படுகிற குற்றவாளி.
பாகிஸ்தான் மற்றும் துபையில் தாவூத் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் பாகிஸ்தானோ தாவூத் தங்களது நாட்டில் பதுங்கி இருக்கவில்லை என தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு நபருடன் தொழில் ரீதியாக தாவூத் தொலைபேசியில் பேசியதை ஐரோப்பிய உளவு நிறுவனம் பதிவுசெய்துள்ளது. தாவூத் தொலைபேசி அழைப்பை ஆராய்ந்ததில் அவன் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின் பதிவுகளை இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பு மற்றும் உளவு நிறுவனமான "ரா" கேட்டுள்ளது. இதனால் தாவூத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை மும்முரமடையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.