நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் சகோதரருக்கு ஜாமீன் – வழங்கியது மும்பை விரைவு நீதிமன்றம்
மும்பை: மும்பையில் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கருக்கு மும்பை விரைவு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் கேட்டு தாக்கியதாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மும்பை பேண்டி பஜார் பகுதியை சேர்ந்தவர் சலீம் சேக். ரியல் எஸ்டேட் ஏஜெண்டான இவரை கடந்த வெள்ளிக்கிழமை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் காஸ்கர் உள்ளிட்ட 3 பேர் சந்தித்தனர். அப்போது, தங்களுக்கு ரூபாய் 3 லட்சம் தர வேண்டும் என்று அவரை மிரட்டினர்.
சலீம் சேக் பணம் தர முன்வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.
அவர்களது தாக்குதலுக்கு ஆளான சலீம் சேக், இது பற்றி உடனடியாக பைகுல்லா போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் ஜே.ஜே.மார்க் போலீசாரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது என்பதால், இந்த வழக்கு பின்னர் பைகுல்லா போலீசில் இருந்து ஜே.ஜே.மார்க் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் காஸ்கர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவ்வழக்கினை விசாரித்த மும்பை விரைவு நீதிமன்றம் இக்பாலுக்கு 50,000 சூயூரிட்டியுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் 5 ஆவது சகோதரரான இக்பால் காஸ்கர், கடந்த 2003 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்.
கொலை வழக்கு மற்றும் சர்ச்சைக்குரிய சாரா சகாரா கட்டிட வழக்கில் தொடர்புடைய அவரை, கடந்த 2007 ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications