ஏவுகணைகளை விற்று ஹெராயின் வாங்கிய தாவூத்தின் தம்பி மகன்... அமெரிக்காவில் கைது
மும்பை: "போதை தீவிரவாத" (narco-terrorism) புகாரின் பேரில் தாவூத் இப்ராகிமின் தம்பி மகன் சோஹைல் கஸ்கர் என்பவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர் மீது வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு ஒன்றுக்கு அவர் சட்டவிரோதமாக தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை விற்றது. பதிலுக்கு ஹெராயின் போதைப் பொருளைப் பெற்று அமெரி்க்கா வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் உதவி செய்ததாக கூறப்படும் தீவிரவாத அமைப்பானது கொலம்பியாவில் உள்ள பார்க் (FARC) எனப்படும் புரட்சிகர ராணுவப் படை என்ற தீவிரவாத அமைப்பாகும்.
சோஹைலுடன் மேலும் 2 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். முன்னதாக இவர்கள் ஸ்பெயினிலிருந்து அமெரி்க்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த டிசம்பர் மாதமே கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருந்துள்ளது. தற்போது லீக் ஆகி விட்டது.
அலி டானிஷ் என்ற பெயரிலும் அழைக்கப்படும் சோஹைல், தாவூப் இப்ராகிமின் தம்பி நூராவின் மூத்த மகன் ஆவார். தற்போது சோஹைலை விடுவிக்கவும், தண்டனையிலிருந்து காப்பாற்றவும் பெரும் பொருட் செலவில் சட்ட நிபுணர் ஒருவரை களம் இறக்கியுள்ளாராம் தாவூத். கைது செய்யப்பட்டுள்ள சோஹைல் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 25 வருடம் மற்றும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
சோஹைலுக்காக டாம் கெனிப் என்ற வழக்கறிஞர் ஆஜராகவுள்ளார். மன்ஹாட்டன் பெடரல் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்படுள்ளது.
தன்னிடம் சொல்லாமல் சோஹைல் தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் இப்படி சிக்கிக் கொண்டதாக தாவூத் வருத்தத்தில் இருக்கிறாராம். தன்னிடமோ தனது குழுவைச் சேர்ந்த மூத்தவர்களிடமோ தான் செய்த வேலைகள் குறித்து சோஹைல் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கோபமாகவும் இருக்கிறாராம்.
ஏவுகணைகள் விற்பனை தொடர்பாக ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் வைத்து இந்தக் குழு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இறுதியில் மிகப் பெரிய அளவிலான ஹெராயினைப் பெற்றுக் கொண்டு பதிலுக்கு இந்த ஏவுகணைகளை சப்ளை செய்ய இவர்கள் ஒப்பந்த் போட்டுள்ளனர் என்று அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது.