தாவூத்தை நெருங்கும் போலீஸ்? மும்பையில் "கூட்டாளி" ரியாஸ் பாத்தி சுற்றி வளைத்து கைது!
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி 2 போலி பாஸ்போர்ட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி. இவர் மீது நில அபகரிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மும்பையில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் ரியாஸ் பாத்தி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானநிலையத்துக்கு விரைந்து சென்ற புலனாய்வு அதிகாரிகள், ஜோகனஸ்பர்க் செல்வதற்காக விமான நிலையம் வந்த ரியாஸ் பாத்தியை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு பாஸ்போர்ட்டில் மீசை இல்லாமலும், இன்னொரு பாஸ்போர்ட்டில் மீசையுடனும் அவரது புகைப்படம் இருந்தது. ஒன்றில் அவரது சரியான பெயரும், மற்றொன்றில் பூல்ஜி பாத்தி என்றும் இருந்தன.
இந்த பாஸ்போர்ட்டுகளை கடந்த 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் அவர் ஜெய்ப்பூரில் இருந்து பெற்றது தெரியவந்தது. இரண்டு பாஸ்போர்ட்டிலும் வெவ்வேறு பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவை போலி பாஸ்போர்ட்டுகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியாஸ் பாத்தியை, வரும் 2-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.












Click it and Unblock the Notifications