ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மீது சார்ஜ்ஷீட் தாக்கல்! ப.சி, கார்த்தி குறித்தும் விசாரணை
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரான சன் குழும அதிபர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கப் பிரிவு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெறுவதாகவும் அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்தார்; இதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்தனர் என்பது சிபிஐ குற்றச்சாட்டு.

இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.
இதனடிப்படையில் சன் குழுமத்துக்கு சொந்தமான ரூ742 கோடி சொத்துகளை முடக்கவும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போய் தப்பித்தது சன் குழுமம்.
இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்பாக அமலாக்கப் பிரிவு இன்று இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட 6 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications