ரயில்வே கேண்டீன் பிரியாணியில் செத்த எலி!... ஐயப்ப பக்தர்கள் கிலி!!
விஜயவாடா: ஒரு படத்தில் கார்த்திக்கும் கவுண்டமணியும் திருமணத்தை நிறுத்த விருந்து சாப்பாட்டில் செங்கல்லை வைத்துவிட்டு கலவரம் செய்ய நினைப்பார்கள்.
அப்போது பக்கத்தில் சாப்பிடும் ஒருவர் ஏய், சாப்பாட்ட செத்த எலி கிடந்துச்சு... அதையே தூக்கி தூரப்போட்டுட்டு தூர் வாறிட்டு இருக்கேன். நீ என்ன கல்லு கெடக்கிறேன்னு சொல்ற என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிடுவார். அதுபோல ஒரு சம்பவம் நிஜமாகவே ரயிலில் சென்ற ஐயப்ப பக்தர்களுக்கு நடந்துள்ளது.
சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டுவிட்டு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பி பக்தர்கள் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தனர். . அவர்களுக்கு எலி பிரியாணியை கொடுத்து கிலியை ஏற்படுத்தியுள்ளது ரயில்வே நிர்வாகம். இந்த உணவை தெரியாமல் சாப்பிட்டு வாந்தி வயிற்றுப்போக்குடன் பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலம் நிஜாமுதீன் வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு கிளம்பியது. விஜயவாடாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 500 பேர் சபரிமலை சென்றுவிட்டு ரயிலின் பி2 பெட்டியில் பயணம் செய்தனர்.
நெல்லூர் மாவட்டம் கூடூரு அருகே வந்தபோது ரயில்வே கேன்டீனில் 30 வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தனர். அவர்களுக்கு நேற்று மதியம் 1 மணிக்கு வெஜிடபிள் பிரியாணி சப்ளை செய்யப்பட்டது.
இதில் லீலாசாய் என்ற பக்தருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் எலி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சக ஐயப்ப பக்தர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையில் பிரியாணி சாப்பிட்ட 10க்கும் அதிகமான பக்தர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயவாடா ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த பக்தர்கள் ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். ரயிலில் வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்ததைக் கேட்டு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.