அலறும் அசாம்.. வடியாத மழை வெள்ளம் - உயிரிழப்பு 135 ஆக உயர்வு
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொட்டித்தீர்த்த அதிதீவிர மழை காரணமாக 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பிரமபுத்திரா மற்றும் பராத் நதிகளில் தண்ணீர் நிரம்பி கரை உடைந்து நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டும் 45.34 லட்சம் மக்கள் தத்தளித்து வருவதாகவும், கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கும் பார்பட்டா மாவட்டத்தில் 10.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கனமழை வெள்ளம் சூழ்ந்ததால் அசாம் மாநிலத்தில் 74,706 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன.
இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் 17 பேர் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களாவர். தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அசாமில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படை வீரர்கள் வான்வழியாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்கியும் இடிபாடுகளை பார்வையிட்டும் வருகின்றனர். அசாமில் இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 2.14 லட்சம் பேர் மீட்கப்பட்டு 564 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications