இலவச குடிநீர், மின்கட்டண குறைப்பு பற்றி வரும் வாரம் அறிவிப்பேன்: முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி: தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான டெல்லி வாழ் குடும்பங்களுக்கு தினமும் 700 லிட்டர் இலவச குடிநீர் மற்றும் மின்கட்டணத்தை சரி பாதியாகக் குறைக்கும் வாக்குறுதிகள் குறித்து நாளை மற்றும் அதற்கடுத்த நாட்களில் அறிவிக்கப் படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக நேற்று பதவியேற்றார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்துக்கு சென்ற முதல்வர், துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மின்சாரம், போக்குவரத்து, ஊழல் கண்காணிப்பு, டெல்லி குடிநீர் வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் கெஜ்ரிவால் கூறியதாவது:-

இலவச குடிநீர்...
நாங்கள் தேர்தல் அறிக்கையில், வீடுகளுக்கு தினந்தோறும் தலா 700 லிட்டர் இலவச குடிநீர் அளிப்பதாகவும், மின்கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்தோம்.

திங்கட்கிழமை...
இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களை கணக்கு போட்டு சொல்லுமாறு கூறியுள்ளேன். எனவே, திங்கட்கிழமைக்குள் இலவச குடிநீர் பற்றி அறிவிப்பேன்.

செவ்வாய்....
அதுபோல், மின்கட்டணத்தை குறைப்பது பற்றி செவ்வாய்க்கிழமையோ அல்லது புதன்கிழமையோ அறிவிப்பேன்.

என் முதல்பணி....
சி.என்.ஜி. எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்களின் பிரச்சினையை தீர்ப்பதுதான் எனது முதல்பணி.

அதிகாரிகளுக்கு பாதுகாப்பு...
நாங்கள் அதிகாரிகளை பழிவாங்குவோம் என்று வதந்தி பரவி உள்ளது. அதுபற்றி அதிகாரிகளுடன் பேசிய நான், 'நீங்கள் நேர்மையாகவும், மக்கள் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் பணியாற்றுங்கள். உங்களை நான் பாதுகாப்பேன்' என்று கூறினேன்.

டெல்லியில் குடியேறுவேன்...
நான் தற்போது காசியாபாத் மாவட்டம் கவுசாம்பியில் வசித்து வருகிறேன். என் ஆதரவாளர்கள் டெல்லியில் எனக்கு வீடு பார்த்து வருகிறார்கள். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் டெல்லியில் குடியேறி விடுவேன்' எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பு....
பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், முதலாவது அமைசரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ‘டெல்லி மாநில அரசின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ தங்கள் கார்களில் சிவப்பு சுழல் விளக்குகளை பொருத்திக்கொள்ள மாட்டார்கள். அதிகாரிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியோ, பாதுகாப்பு வாகனமோ வழங்கப்படமாட்டாது. அச்சுறுத்தல் அடிப்படையில்தான் பாதுகாப்பு வழங்கப்படும்' என முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications