டெல்லி சட்டசபை தேர்தலை சந்திக்க பயந்து ஓடும் பாஜக: "ஆல்ரெடி" ஆட்சியை விட்டு ஓடிய ஆம் ஆத்மி தாக்கு!
டெல்லி: டெல்லியில் புதிதாக சட்டசபை தேர்தல் நடந்தால் தோல்வியடைவோம் என்ற பயத்தில் பாஜக பயந்து ஓடுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி, குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், சட்டப்பேரவை கலைக்கப்படவில்லை. இந்நிலையில் ஆட்சியமைக்க தங்களை அழைக்குமாறு பாஜக வேண்டுகோள்விடுத்துள்ளது.
குதிரை பேரம்?
போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாத நிலையில் பாஜக இவ்வாறு கூறியுள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பணம் கொடுத்து குதிரை பேரம் மூலமாக பிற கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக இரட்டை நிலைப்பாடு
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தேர்தலை சந்திக்கப்போவதாக கூறிவந்த பாஜக தற்போது எடுத்துள்ள இரட்டை நிலைப்பாட்டை பார்க்கும்போது, தேர்தலை பார்த்து பயந்து ஓடுவதைபோலத்தான் தெரிகிறது.
உச்சநீதிமன்றம் கண்டிப்பு
டெல்லி சட்டசபையை கலைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குதிரை பேரத்தை எந்த கட்சியும் ஊக்குவிக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காங்கிரசுக்கும் பயம்
பாஜவை போலவே காங்கிரசும் தேர்தலை பார்த்து பயந்துபோயுள்ளது. இதனால்தான் டெல்லி சட்டசபை கலைப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காக்கிறது.
தோலுரிப்போம்
பாஜகவின் குதிரை பேரத்தை ஆம் ஆத்மி பொதுமக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தாமல் விடாது". இவ்வாறு அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.