கெஜ்ரிவாலை ஏமாற்றிய கடிதம்.. கடைசி வரை வராத அழைப்பு! ஜன 22ல் ராமர் கோவில் போகமாட்டேன் என விரக்தி
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பங்கேற்கும் வகையில் ஜனவரி 22ம் தேதியில் பிற நிகழ்ச்சிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்த நிலையில் தற்போது வரை அவருக்கு அழைப்பிதழ் என்பது வரவில்லை. மேலும் அவர் ராமர் கோவில் விழா தொடர்பான கடிதத்தை நம்பி தற்போது ஏமாந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட கால சர்ச்சை, பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகு உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். மேலும் மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், முதல்வர்கள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 3 ஆயிரம் விவிஐபிக்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவவுக்கான சிறப்பு பூஜைகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா விஷயத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏமாந்துபோய் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் என்பது உங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் அந்த தேதியில் பிற நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து கெஜ்ரிவாலும் ஜனவரி 22ம் தேதியில் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தி உள்ளார். ஆனால் தற்போது வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விழாவுக்கான அழைப்பிதழ் என்பது கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தியடைந்துள்ளார்.
இந்நிலையில் தான் முதல் முதலாக அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஜனவரி 22ம் தேதியில் எனக்கான நிகழ்ச்சிகளை எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு செல்வதற்காக இதனை கூறினேன். ஆனால் எனக்கு விழாவுக்கான அழைப்பிதழ் என்பது வரவில்லை. முன்னதாக வந்த கடிதத்தில் பாதுகாப்பு மற்றும் விஐபி நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனது பெற்றோர் அயோத்தி ராமர் கோவில் செல்ல ஆர்வமாக உள்ளனர். இதனால் கும்பாபிஷேகம் முடிந்ததும் நான் எனது முழு குடும்பத்துடன் அயோத்திக்கு செல்ல உள்ளேன். அழைப்பு இல்லை என்றாலும் கூட வரும் நாட்களில் நான் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வேன். ஜனவரி 22க்கு பிறகு நான் எனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளேன்’’ என்றார். முன்னதாக நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் நேற்று டெல்லி கோவிலில் நடந்த 'சுந்தர் காந்த்' பாராயணத்தில் கலந்து கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமர் மற்றும் அனுமன் ஆகியோரிடம் வேண்டினர்.
அழைப்பிதழ் வரவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தத்தில் உள்ள அதேநேரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிவசேனா (யூபிடி) அணி தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே ஆகியோர் விழா அழைப்பை நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications