ஹார்ட் அட்டாக்.. துடிப்பதை நிறுத்திய இதயம்.. ஒரு மணி நேரம் போராடி இளைஞரைக் காப்பாற்றிய டாக்டர்கள்!
ஒரு மணி நேரமாக இதயத்துடிப்பு நின்றுபோன ஒரு இளைஞரை, டெல்லி அப்போலோ மருத்துவர்கள் காப்பாற்றினர்.
டெல்லி: சுமார் ஒரு மணி நேரமாக இதயத்துடிப்பு நின்றுபோன ஒரு இளைஞரை, டெல்லி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் எனும் ஊரை சேர்ந்தவர் ஆசிப் கான். 22 வயதான ஆசிப் கான், ஒரு பொறியியல் பட்டதாரி. இரு வாரங்களுக்கு முன்பு ஆசிப்கானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்துக்கொண்டிருந்தபோதே, ஆசிப்கானுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு, சி.பி.ஆர். எனப்படும் செயற்கை முறையில் இதயத்தை இயக்கும் சிகிச்சை மற்றும் ஷாக் ட்ரீட்மெண்ட் ஆகியவை தரப்பட்டன. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், நின்றுபோன ஆசிப்கானின் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
நெஞ்சுவலிக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக ஆன்ஜியோகிராம் எனப்படும் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றபோது தான் ஆசிப் கானுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும், மீண்டும் அவருக்கு ஆன்ஜியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டு, ரத்தக்குழாயில் இருந்த அடைப்பை ஸ்டேன்ட் வைத்து சரி செய்துள்ளனர் மருத்துவர்கள்.
இரண்டு வார காலம் முழுமையாக சிகிச்சை முடிந்த பின்னர், வீடு திரும்பி இருக்கிறார் ஆசிப்கான். இது மருத்துவர்கள் ஆசிப்கானுக்கு தந்த மறுவாழ்வாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications