கெஜ்ரிவாலின் காலை வாரிய ‘செல்ஃபி புள்ள’... தேர்தல் நிதியில் சறுக்கலை சந்தித்தது ஆம் ஆத்மி!
டெல்லி: டெல்லி தேர்தல் நிதியாக ரூ. 30 கோடி திரட்ட வேண்டும் என்ற இலக்கில் 18 கோடியை மட்டுமே திரட்டியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, ரூ. 30 கோடி நிதி திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது ஆம் ஆத்மி கட்சி. இதற்கென பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, தீவிரமான நிதி திரட்டும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டனர்.
இதற்கென அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால் பயணம் செய்யும் ஒவ்வொரு ஊரிலும், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளுதல், விருந்து சாப்பிடுதல் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப் பட்டது. இதில் கலந்து கொள்ள கட்டணமும் நிர்ணயிக்கப் பட்டது.

கெஜ்ரிவாலோடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு, ‘செல்ஃபி வித் மப்ளர் மேன்' எனப் பெயர் வைக்கப் பட்டது. ஆம் ஆத்மியின் இந்த யுக்தியைப் பாலோ செய்து, பாஜகவும் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் திட்டத்தை அறிவித்தது.
இவ்வாறு ஆம் ஆத்மிக்கு நிதி திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டபோதும், அவர்களால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. டெல்லி தேர்தல் நிதியாக ரூ. 18 கோடி மட்டுமே ஆம் ஆத்மி திரட்டியது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் நிதி சேகரிப்பு பொறுப்பாளரான அரவிந்த் ஜா கூறுகையில் "தேர்தலுக்கு முன் 30 கோடி ரூபாய் திரட்டுவதே எங்கள் இலக்காக இருந்தது. ஆனால் எங்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. அதே சமயம் இதற்காக நாங்கள் இரண்டு மாதங்களாக மட்டுமே வேலை செய்தோம் என்பதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்." என்றார்
எனவே, டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பிறகும், தொடர்ந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications