ஆம் ஆத்மிக்கு "ஹவாலா" மூலமாக ரூ. 2 கோடி பணம் வந்ததா...?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த ரூ. 2 கோடி நிதி குறித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்து போய் தனி அமைப்பாக இயங்கி வரும் ஆம் ஆத்மி தொண்டர்கள் படை இயக்கம் (அவாம்) என்ற அமைப்பு. அந்தப் பணம் முறைகேடாக வந்ததாகவும், ஹவாலா மூலமாக அந்தப் பணம் ஆம் ஆத்மிக்கு வந்திருப்பதாகவும் அது கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பணத்தைக் கொடுத்ததாக கூறப்படும் நிறுவனங்களால் உண்மையில் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயமாக திரட்டியிருக்க முடியாது என்றும் அவாம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 7ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இப்படி ஒரு புகார் கிளம்பியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாஜகவும், காங்கிரஸும், ஆம் ஆத்மி பாயத் தொடங்கியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நான்கு நிறுவனங்களிடம் இருந்து தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடி நன்கொடை வந்ததாக அவாம் அமைப்பைச் சேர்ந்த கரன்சிங், கோபால் கோயல் ஆகியோர் நேற்று பகிரங்கமாக குற்றம் சாட்டினர். அந்த நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் தருகிற அளவுக்கு பணம் கிடையாது என்றும், இதில் முறைகேடு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த நிதி கண்டிப்பாக ஹவாலா மூலமாக் வந்த பணம் தான் என்று மத்திய அமைச்சர்களான பியுஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேட்டுக்கொண்டார்.
ஆனால், கட்சியை களங்கப்படுத்த நடக்கும் சதி என்று வர்ணித்துள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இதுபற்றி விசாரணை நடத்த தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி தலைவர்கள் சிலர் கூறுகையில், கட்சிக்கு வரும் நிதியை முறையாக காசோலைகள் மூலமாகவே பெறுவதாகவும், நன்கொடை தருவோரின் பான் கார்டு எண் கட்டாயம் பெறப்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் ஆம் ஆத்மியின் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் 2 முறை சோதித்துள்ளதாகவும், அப்போது தவறு ஏதும் இல்லை என்று அவர்கள் கூறியதாகவும் ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனி விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதற்கு நாங்கள் தயார் என்றும் ஆம் ஆத்மி சவால் விட்டுள்ளது. ஆனால் ஒரே நாளில் எப்படி ரூ. 2 கோடி ஆம் ஆத்மிக்கு வந்தது என்பதுதான் புரியவில்லை. எதிலும் சுதாரிப்பாக இருக்கும் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் ஏன் மெத்தனமாக இருந்தார் என்பதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதேசமயம், இந்தப் பணத்துக்கான கணக்கை தனது இணையதளத்தில் விரிவாக கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். அவர் மோசடியான முறையில் இந்தப் பணத்தைப் பெற்றிருந்தால் ஏன் இப்படி விரிவாக கணக்கு கொடுக்கிறார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் பதில் கேள்வி கேட்கின்றனர்.
ஆம் ஆத்மிக்கு ரூ. 2 கோடியைக் கொடுத்ததாக கூறப்படும் நிறுவனங்கள் இவைதான் - கோல்ட்மைன் பில்ட்கான் பிரைவேட் லிமிட்டெட், ஸ்கைலைன் மெட்டல் மற்றும் அல்லாய்ஸ், சன்விஷன் ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் இன்போலன்ஸ் சாப்ட்வேர் சொலூஷன்ஸ் லிமிட்டெட் ஆகியவையே ஆகும். இதில் ஹேம் பிரகாஷ் சர்மா என்பவர் நான்கில் மூன்று நிறுவனங்களில் இயக்குநராக இருக்கிறார். இவர் கொடுத்துள்ள முகவரி போலியானது என்று கூறப்படுகிறது. அவர் கொடுத்துள்ள முகவரியில் வசிப்போர் தாங்கள் 20 வருடமாக இதே இடத்தில்தான் வசித்து வருவதாகவும், ஹேம் பிரகாஷ் சர்மா என்று யாருமே இங்கே வசிக்கவில்லையே என்று கூறுகிறார்கள்.
இதுதான் தற்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications