டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும்.. காங். தூள் தூளாகும்.. 2வது இடமே பாஜகவுக்கு: புதிய சர்வே
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மியே ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி நியூஸ் - நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி 35 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்றும் பாஜக 29 இடங்களுடன் 2வது இடத்தையே பிடிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 6 இடங்களே கிடைக்கும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பால் மோடி அலை என்று பாஜகவினர் பேசி வருவது கேள்விக்குறியாகியுள்ளது. டெல்லியில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனால் அது பாஜகவுக்கும், மோடி இமேஜுக்கும் பெரும் அடியாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
35 இடங்கள் என்பது மெஜாரிட்டி அல்ல. மெஜாரிட்டிக்கு 36 இடங்கள் தேவை. எனவே ஒரு இடம் குறைவாக ஆம் ஆத்மி பெறுமாம். இருப்பினும் தனிப் பெரும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என்பதால் அந்தக் கட்சிக்கே ஆட்சியமைக்க முதலில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிபி நியூஸ் - நீல்சன் சர்வே
ஏபிபி நியூஸ் நிறுவனமும், நீல்சன் நிறுவனமும் இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. ஜனவரி 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை 35 தொகுதிகளில் இந்தக் கருத்துக் கணிப்பை அது நடத்தியது. மொத்தம் 6396 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

கெஜ்ரிவாலே முதல்வர்
டெல்லி வாக்காளர்கள் மத்தியில் கெஜ்ரிவாலுக்கு இன்னும் நல்ல செல்வாக்கு உள்ளது. அவரே முதல்வராக வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இப்படி விரும்புகிறவர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக உள்ளது.

கிரண் பேடிக்கு 2வது இடமே
பாஜகவின் முதல்வர் வேட்பாளரான கிரண் பேடிக்கு 42 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.

தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியே டெல்லி தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்குமாம். அக்கட்சிக்கு 37 சதவீத ஓட்டுக்கள் கிடைக்குமாம். பாஜகவுக்கு 33 சதவீத வாக்குகளும், காங்கிரஸுக்கு 18 சதவீத வாக்குகளும் கிடைக்குமாம்.

பேடியை விட கெஜ்ரிவாலே பெஸ்ட்!
மோடியை விட கெஜ்ரிவாலே சிறந்தவர், சிறந்த முதல்வராக இருக்கக் கூடியவர் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய திறமை கெஜ்ரிவாலுக்கே அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்புக்கு பேடி பெஸ்ட்
அதேசமயம், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் கெஜ்ரிவாலை விட பேடியே சிறந்தவர் என்று வாக்காளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

முஸ்லீம்கள், குடிசைவாசிகள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு
டெல்லியில் வசிக்கும் முஸ்லீ்ம் வாக்காளர்கள், குடிசைப் பகுதி மக்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மத்தியில் ஆம் ஆத்மிக்கும், கெஜ்ரிவாலுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. குறிப்பாக குடிசைப் பகுதியில் பேராதரவு காணப்படுகிறது.

முஸ்லீம்கள் பேராதரவு
அதேபோல முஸ்லீம்கள் மத்தியிலும் கெஜ்ரிவாலுக்கு பெரும் ஆதரவு காணப்படுகிறது. மூன்றில் 2 முஸ்லீ்ம் வாக்காளர்கள் ஆம் ஆத்மிக்கே வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

கிரண் பேடியால் பாஜகவுக்கு லாபம் இல்லை
கிரண் பேடியை பாஜகவில் சேர்த்ததால் அக்கட்சிக்கு எந்த லாபமும் கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அவரால் கூடுதல் வாக்காளர்களைக் கவர முடியாத நிலையே இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

பாஜக ஆதரவாளர்கள் மாற்றம்
பொதுவாக காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை. அதேசமயம், பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் லேசான மாற்றம் தெரிகிறதாம். கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications