டெல்லியில் மோசமான பனிமூட்டம்- ரயில், விமான சேவைகள் கடும் பாதிப்பு
டெல்லி: டெல்லியில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீடிக்கும் பனிமூட்டத்தால், சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து அனைத்துமே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளளது.
டெல்லியில் நள்ளிரவு முதலே பனி கொட்டத் தொடங்கி விடுகிறது. இன்று காலையில் நீண்ட நேரமாகியும், சூரிய வெளிச்சம் காணாத அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது.
4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு..
காலை 9 மணியளவிலும் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றன. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிமூட்டம் இன்று இருந்தது.
ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
பனி மூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வரும் ரயில்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்கின்றன.
ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைப்பு
இதேபோல் புறப்படும் பல ரயில்களின் நேரங்களும் பனி மூட்டத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
முடங்கிய விமான நிலையம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பனி மூட்டம் காணப்பட்டதால், விமானங்கள் புறப்படவோ, தரை இறங்கவோ முடியவில்லை.
206 விமானங்கள் தாமதம்
விமான நிலையத்தில் ஓடு பாதை தெளிவாக தெரியாததால் சுமார் 206 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.
ரத்தான 90 விமான சேவைகள்
அத்துடன் புறப்பட வேண்டிய 51 சர்வதேச விமானங்களும் வந்து சேர வேண்டிய 39 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேறு நகரங்களுக்கு மாற்றம்
மேலும் டெல்லி வர வேண்டிய 52 விமானங்கள் அமிர்தசரஸ், லக்னோ உள்ளிட்ட வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
களேபரத்துக்கு மத்தியில்..
பனிமூட்டம் படுத்தியபாட்டுக்கு மத்தியில் கோவாவில் இருந்து டெல்லி வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், எரிபொருள் தீர்ந்ததால் 132 பயணிகளுடன் அவசரமாக டெல்லி விமான நிலையத்திலேயே தரை இறக்கபட்டது.
பயணிகள் அவதி
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பலரும் டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்பப் பெற நீண்டவரிசைகளில் காத்திருக்க நேரிட்டது.
பிற மாநிலங்களிலும்..
டெல்லியில் மட்டுமின்றி ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் பனி கொட்டுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.