நிர்பயா வழக்கில் திடீர் திருப்பம்: சிறார் குற்றவாளிக்கு எதிராக நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தில் மனு !
டெல்லி: நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலையை எதிர்த்து டெல்லி மகளிர் அணி ஆணையத் தலைவி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஜோதிசிங் என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங்கை கொடூரமாக தாக்கவும் செய்தது. அவரது பிறப்புறுப்பில் இரும்புக் குழாயால் தாக்கியதால் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக சேதமடைந்தன. இதன் விளைவாக ஜோதி சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இளங்குற்றவாளி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளம் குற்றவாளியின் சிறைத் தண்டனை சட்டப்படி முடிந்து விட்டதால் அவரது விடுதலையை தடுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இதனால் அந்தக் குற்றவாளி திட்டமிட்டபடி விடுதலை செய்யப்படுகிறார். இவரது விடுதலைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், சட்டத்தின்படியே அனைத்தும் நடந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
இந்த நிலையில் சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் உச்ச நீதிமன்றத்தில் சற்று முன் மனு அளித்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் மனுவை உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். மனுவை அவசர வழக்காக விசாரிப்பதா என்பது குறித்து விடுமுறைக்கால அமர்வு முடிவு செய்யும்.
SC accepted r petition. Matter listed on Monday as Item No 3. Case subjudice now. Nirbhaya rapist should not be released until case heard.
— SwatiMaliwal JaiHind (@SwatiJaiHind) December 19, 2015
இதற்கிடையில், விடுதலையாக இருக்கும் சிறார் குற்றவாளி திடீரென ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளான். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளிவரும்போது அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், ரகசிய இடத்தில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.