டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: 4 கைதிகளையும் நாளை ஆஜர்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உறுதி செய்வது குறித்த விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் துவங்கியது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுதாக்கப்பட்டதில் உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மைனர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இதில் மைனருக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மீதமுள்ள 5 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் முகேஷ்(26), அக்ஷயம் குமார்(28), பவன் குப்தா(19) மற்றும் வினய் சர்மா(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 13ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி யோகேஷ் கன்னா இந்த தீர்ப்பை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அந்த 4 பேரின் மரண தண்டனையையும் உறுதி செய்வது தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று துவங்கியது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவா கேத்ரபால், பிரதீபா ராணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அந்த 4 குற்றவாளிகளையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு திகார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications