ஒபாமா தங்கும் ஹோட்டல் அருகே தெரு லைட் சரி இல்லையாம்... கன்னத்தில் கைவைக்கும் டெல்லி போலீஸ்!
டெல்லி: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா தங்க இருக்கும் ஹோட்டல் பகுதியில் சிசிடிவி கேமரா மற்றும் மின் விளக்கு வசதி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் டெல்லி போலீஸ் கவலையடைந்துள்ளனர்.
இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 24ம் தேதி டெல்லி வர இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீசார் செய்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி போலீசார் நடத்திய பாதுகாப்பு ஆய்வில் ஒபாமா தங்கும் ஐ.டி.சி. மவுரியா ஹோட்டல் பகுதி அருகே உள்ள நீண்ட பாதையில் சி.சி.டி.வி. கேமரா இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சர்தார் படேல் மார்க் மற்றும் படேல் தம் மனாஸ் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சுணக்கமாக உள்ளதும், மவுரியா ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் மின்சார விளக்குகளும் போதிய அளவுக்கு இல்லாததும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக 75 சி.சி.டி.வி கேமராக்களை அப்பகுதியில் நிறுவ டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இத்திட்டத்திற்கு டெல்லி போலீஸ் தலைமை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப் படுகிறது.
மேலும், மவுரியா ஹோட்டலுக்கு எதிரே உள்ள மையப்பகுதிகளில் போதுமான மின்விளக்குகளை அமைக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.