சரி, தியானத்தை முடித்து விட்டு வந்து கேஜ்ரிவால் என்ன செய்வார்....?
டெல்லி: டிசம்பர் 7ம் தேதிதான் மீண்டும் வெளியில் வருவேன். அதுவரை தியானம் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவர் என்ன மாதிரியான நகர்த்தல்களை மேற்கொள்ளப் போகிறார். டெல்லி சட்டசபையில் யாருக்கு அவரது கட்சி ஆதரவு தரப் போகிறது.. யார் ஆட்சி அமைய உதவப் போகிறது.. அல்லது கட்சி உடையாமல் காக்கப் போராடப் போகிறதா.. என்று பலப் பல கேள்விகள் இப்போதே உலா வர ஆரம்பித்து விட்டன.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 17 இடங்கள் வரை கிடைக்கும் என்று கிட்டத்தட்ட அத்தனை எக்ஸிட் போல் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தக் கட்சிக்குப் போய் இத்தனை இடமா என்று காங்கிரஸும், பாஜகவும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளன.

பாஜகவுக்கு கூடுதல் இடங்கள்தான்.. ஆனால்
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால் ஆட்சியமைக்க முடியாதே..
ஆனால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு விட்டது. அதேபோலத்தான் காங்கிரஸ் நிலையும்.

கேஜ்ரிவால் நிலைப்பாடு...
தேர்தல் பிரசாரத்தின்போதே டெல்லி சட்டசபையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நாங்கள் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம் என்று கூறியிருந்தார். எனவே அவர் பாஜகவையும் ஆதரிக்க மாட்டார், காங்கிரஸுக்கும் கை கொடுக்க மாட்டார் என்பது உறுதி.

அப்படியானால் அடுத்து என்ன நடக்கும்...
எனவே இப்படிப்பட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

குதிரை பேரம் கொடி கட்டிப் பறக்கலாம்
ஆனால் ஆட்சிக் கட்டிலின் நுனி வரை வந்து விட்டதால், பாஜக நிச்சயம் குதிரை பேரத்தில் இறங்கி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை உடைக்க முயலும் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. எனவே குதிரை பேரம் கொடி கட்டிப் பறக்கலாம் என்ற வலுவான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உடைபடப் போவது யாரோ....
அப்படி பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் அதிக அளவிலான பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் தரப்பிலிருந்தும் சிலரை இழுக்கும் முயற்சிகள் நடத்தப்படலாம் என்றும் தெரிகிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்புண்டா...
ஒரு வேளை ஆம் ஆத்மியினர் உறுதியாக இருந்து விட்டால், கட்சியை உடைக்க முடியாமல் போனால் பாஜக, காங்கிரஸ் நிலை திண்டாட்டமாகி விடும். யாராலும் ஆட்சியமைக்க முடியாமல் போனால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலப்படுத்தக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

ஆச்சரியத்தில் காங்., பாஜக
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் இந்த திடீர் எழுச்சியால் காங்கிரஸும், பாஜகவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

எதிர்பார்க்கலையே...
ஆம் ஆத்மிக்கு இத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை இரு கட்சிகளும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. ஏதோ எறும்பு கடித்தாற் போல பாதிப்பு இருக்கும் என்றுதான் இரண்டு கட்சிகளும் நினைத்திருந்தன. ஆனால் எருமை ஏறி மிதித்தாற் போன்று ஆம் ஆத்மி அடித்து நொறுக்கியிருப்பது அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இரு கட்சிகள் மீதும் மக்கள் செம வெறுப்பு
ஆனால் உண்மையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மீதும் டெல்லி மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதையே இது காட்டுவதாக அங்கிருப்போர் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு இரு கட்சிகளும் டெல்லியை சரிவரக் கவனிக்கவில்லை என்பதே தலைநகர் மக்களின் கருத்தாகும்.

15 வருட காங்கிஸ் ஆட்சி
டெல்லியில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆட்சியில் இருந்து வந்தது. அதைத் தகர்த்து விட பாஜக முனைப்புடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. ஆனால் கேஜ்ரிவால் உள்ளே புகுந்து கேஸரி கிண்டி விட்டு விட்டார். இதனால் பாஜக கடும் குழப்பமடைந்துள்ளது.

தப்புக் கணக்குப் போட்ட காங்கிரஸ்
பாஜக தான் நமது எதிரி. கேஜ்ரிவாலை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று ஆரம்பத்திலிருந்தே கருதி வந்தது காங்கிரஸ். முதல்வர் ஷீலா தீட்சித் கூட, யார் இந்த கேஜ்ரிவால், அவர் ஒரு தலைவரா, அவர் வைத்திருப்பது ஒரு கட்சியா என்று விமர்சித்து வந்தார். ஆனால் இப்போது காங்கிரஸ் முகாம் பெரும் அமைதியில் உறைந்து கிடக்கிறது.












Click it and Unblock the Notifications