சக விவசாயிகள், கெஞ்சல், கதறல்.. மனமிறங்கி தற்கொலை முடிவை கைவிட்டு மரத்திலிருந்து இறங்கிய இளைஞர்கள்
அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி: மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் இருவரையும் பார்த்து .சக விவசாயிகள் கெஞ்சியதால் அவர்கள் தற்கொலை முடிவை கைவிட்டனர்.
விவசாயிகள் பிரச்சினைக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ரமேஷ் மற்றும் அகிலன் ஆகியோர் இன்று மதியம் திடீரென மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர்.
அப்போது அங்கு நடிகர் விஷால், இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோரும் உடனிருந்தனர். விஷால், கையெடுத்து கும்பிட்டு இளைஞர்களை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டார். பிற சக விவசாயிகளும் கெஞ்சி கேட்டனர். போராட்டத்தின் திசை மாறிவிடும், போராட்ட களத்திலிருந்து போலீசார் விரட்டிவிடுவார்கள் என கூறி அவர்கள் கெஞ்சினர்.
சுமார் 10 நிமிட நேரம் கெஞ்சிய பிறகு இரு இளைஞர்களும் கீழே இறங்கினர். அப்போதுதான் தீயணைப்பு துறை வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அவர்களை திருப்பியனுப்பினர் விவசாயிகள். முன்னதாக கீழே விழுந்துவிட்டால் அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சாக்குப் பையை கீழே பிடித்து வைத்திருந்தனர் சக விவசாயிகள்.
அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே இறங்கிய இளைஞர்களை விஷாலும் பிறரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.