4 ஆண்டுகால பட்டப்படிப்பு சர்ச்சை: டெல்லி பல்கலை. துணைவேந்தர் தினேஷ்சிங் திடீர் ராஜினாமா!
டெல்லி: 4 ஆண்டுகால பட்டப்படிப்பு குறித்த சர்ச்சை வெடித்த நிலையில் டெல்லி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தினேஷ்சிங் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி பல்கலைக் கழகமானது அதன் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 4 ஆண்டுகால இளங்கலை பட்டப் படிப்பை கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதையும் மீறி டெல்லி பல்கலைக் கழகம் 4 ஆண்டுகால பட்டப் படிப்பை நடத்தி வந்தது. அத்துடன் நடப்பாண்டிலும் 4 ஆண்டு கால பட்டப்படிப்புக்கு சேர்க்கையை தொடங்கியது.
ஆனால் திடீரென பல்கலைக் கழக மானியக் குழுவான யுசிஜி, டெல்லி பல்கலைக் கழகத்தின் 4 ஆண்டுகால படிப்புக்கு தடை விதித்தது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. யுசிஜியின் தடை விதிப்பைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
இதனால் பல லட்சம் மாணவர்கள் பரிதவித்து வந்தனர். இந்த நிலையில் டெல்லி பல்கலைக் கழக துணைவேந்தர் தினேஷ்சிங்குக்கு எதிராக மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
இப்பின்னணியில்தான் திடீரென டெல்லி பல்கலைக் கழக துணைவேந்தர் தினேஷ்சிங் தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.