ரூபாய் நோட்டு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு தில் இல்லை: ரவிசங்கர் பிரசாத் தாக்கு
ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு தில் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு துணிவு இல்லை என்றும், அதிலிருந்து அவர்கள் விலகி ஓடுகின்றனர் என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் ஊழலை ஒழிப்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை என்பதையே வெளிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கவனத்தில் எடுத்து பதில் அளிக்கவும் மத்திய அரசு தயாராக இருந்தும் அவர்கள் அதனை ஏற்க முன்வரவில்லை என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஏன் விலகிச் செல்கின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அரசின் பதிலை பெற அவர்கள் தயாராக இல்லை என்பதையே இது வெளிக்காட்டுவதாகவும், இந்த விவகாரத்தில் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை என்றும் அவர் சொன்னார்.
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை தமக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், ஊழலுக்கு எதிராக போராடுவதில் அவர்கள் தெளிவான நிலைப்பாட்டில் இல்லாமல் இருப்பதையே இது வெளிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் நாடுமுழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது என்றும், விவசாயிகளுக்கும், திருமணத்துக்கும் விதி தளர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
காங்கிஸை நாசுக்காக சுட்டிக்காட்டிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இராஜதந்திரத்தை இழந்து எதிலும் அக்கட்சியினர் அரசியல் நடத்தி வருவதாக குற்றம் சுமத்தினார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் முதுகு எலும்பு முறிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு சாதகமான பலன்கள் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவரது ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இவருடன் மேற்கு வங்க முதலமைச்சர் சேர்ந்துள்ளதுதான் கவலை அளிக்கிறது என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.












Click it and Unblock the Notifications