மோடியால் தூக்கத்தை தொலைத்த கறுப்பு பண முதலைகள், 'ஐடி அதிகாரிகள்'
டெல்லி: மோடியின் அதிரடி நடவடிக்கையால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல வருமான வரித்துறை அதிகாரிகளும் தூக்கத்தை இழந்துள்ளனர்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்.
அதில் இருந்து கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர். அவர்களோடு சேர்த்து வருமான வரித்துறையினரும் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.
அறிவிப்பு
மோடி அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து வருமான வரித்துறையினரின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. போதிய ஆட்கள் இல்லாததால் விடுப்பில் சென்ற அதிகாரிகள் கூட வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
வருமான வரித்துறை
ரெய்டுகள் நடத்த, கண்காணிக்க போதிய ஆட்கள் இல்லாததால் வருமான வரித்துறை பிற துறைகளில் இருந்து ஆட்களை அழைத்து வேலை வாங்கி வருகிறது.
வங்கிகள்
வருமான வரித்துறையினர் கறுப்பு பண நபர்களை பிடிக்க வங்கிகள் மற்றும் நகைக்கடைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்துகிறார்கள்.
ரெய்டு
கறுப்பு பணத்தை பிடிப்பது எளிது அல்ல என்று கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட 20 சோதனைகளில் கலந்து கொண்ட வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரவுடிகள்
நாங்கள் சோதனை நடத்துவது ஒரு பக்கம் இருந்தால் ரவுடிகளை சமாளிக்க வேண்டியது மறுபக்கம் உள்ளது. கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்களில் பலரும், ஹவாலா ஏஜெண்டுகளும் பாதுகாவலர்கள் வைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் போலீசார் உதவியை நாட வேண்டியுள்ளது என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பதில்
கறுப்பு பண முதலைகளிடம் விசாரணை நடத்துவது எளிதல்ல என்கிறார்கள் அதிகாரிகள். கேள்வி கேட்டால் பலர் பதில் அளிப்பது இல்லையாம். உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று துணிச்சலாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறுகிறார்களாம்.