1000 ரூபாய் குறைவு.. தங்கம் விலையில் உள்ள சீக்ரெட்டை சொல்லும் ஆனந்த் சீனிவாசன்! இது வேறயா
சென்னை: நமது நாட்டில் பொதுமக்களுக்குத் தங்கமே பிரதானச் சேமிப்பாக இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த திடீர் விலையேற்றத்திற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த சில வாரங்களாகவே நிலையாக இருந்த தங்கம் விலை, திடீரென ஒரு வாரமாகத் தாறுமாறாக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரியளவில் உயராத போதிலும் இந்தியாவில் மட்டும் எக்குத்தப்பாக உயர்ந்தது. இதற்குப் பிரதானக் காரணமே மத்திய அரசு விதித்த கூடுதல் வரி தான். ஆனால், இத்தோடு இன்னொரு காரணமும் இருப்பதாகச் சொல்கிறார் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்!

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை பெரியளவில் ஏற்றம் இல்லாமல் இருக்கிறது.. வெள்ளி ₹300+ என இருக்கிறது. ஆனால், இதில் விஷயம் என்னவென்றால் கோல்ட் ப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் $4700 இருந்த தங்கம் $4,400 டாலர் கிட்ட வந்துருச்சு. சுமார் 300 டாலர் வரை குறைந்து இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவிலும் கணிசமாகக் குறைந்து இருக்க வேண்டும். ஆனால், நம்ம ஊர்ல ரெண்டு சிக்கல் வந்துவிட்டது.
ரூ.13,500
நமது ஊரில் நிலவரம் தலைகீழாக இருக்க இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, மத்திய அரசின் இறக்குமதி வரி.. இரண்டாவது, இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்குச் சரிந்தது. இந்த இரண்டு காரணங்களால் தான் தங்கம் இந்தியச் சந்தையில் இன்னும் சரிவைச் சந்திக்காமல் பாசிட்டிவ்வாகவே நீடிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த 15% இறக்குமதி வரி இல்லாமல் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பும் சிங்கம் போல நிமிர்ந்து ஸ்ட்ரெய்ட்டாக நின்றிருந்தால், இந்நேரம் தங்கம் விலை ₹13,500க்கு வந்திருக்க வேண்டும்.
ரூபாய் மதிப்பு
ஆனால், மத்திய அரசின் புண்ணியத்தால் அது இப்போது ₹14,750ல் வந்து நிற்கிறது. இதனால்தான் சொல்கிறேன், தங்கத்தின் வேகத்திற்கு அருகில் கூட வேறு எதனாலும் வர முடியாது என்று! அடுத்து, இந்திய ரூபாயின் மதிப்பை 96.30 வரை சரிந்திருக்கிறது. பொருளாதார நிபுணர்கள் பலரும் ரூபாயின் மதிப்பு 96ஐத் தொடுவதற்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரை ஆகும் என்று கணித்திருந்தார்கள். ஆனால், திரைப்படத்தில் நடிகர் மதன் பாபு 'இதோ வந்துட்டேன்' என்று என்ட்ரி கொடுப்பாரே, அதைப் போல இந்த மே மாத இறுதியிலேயே 96-ஐத் தொட்டுவிட்டது. இந்த வேகத்தைப் பார்த்தால் மாத இறுதிக்குள் 97-ஐத் தொட்டுவிடும் போலத் தெரிகிறது.
நிலைமை மோசம்
அங்கிருந்து இன்னும் வெறும் மூன்று தான் பாக்கி. சிங்கிள் சிங்கிளாக ஓடி செஞ்சுரி அடிப்பாரா அல்லது ஒரே ஃபோராக அடித்து சதம் விளாசுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை கச்சா எண்ணெய் 109 டாலர் வரை சென்றுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். இது ஒருபுறமிருக்க, பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாகக் கூடிய சீக்கிரமே சில்லறை விலை பணவீக்கம் 10% என்ற வரை கூட உயரக்கூடும் எச்சரித்திருக்கிறார்கள்" என்றார்.
அதாவது அவர் சொல்ல வருவது சிம்பிள்.. சர்வதேச நிலவரப்படி பார்த்தால், சந்தையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ₹13,800 என்ற ரேஞ்சில் தான் இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரியை உயர்த்தியதால் கிட்டத்தட்ட ரூ.1000 கூடுதலாக உயர்ந்துள்ளது. அதேபோல இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. அதே நிலை நீடித்தால் சீக்கிரமே டாலர் மதிப்பு 100ஐ தொடும். அப்போது தங்கம் விலை மேலும் உயரும்.














Click it and Unblock the Notifications