நாடு தழுவிய ஸ்டிரைக்! தமிழ்நாட்டில் மெடிக்கல் ஷாப்கள் திறந்திருக்குமா? நிலைமை இதுதான்
சென்னை: ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றன. எனவே இதன் பாதிப்பு தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்லைன் மருந்துக் கடைகள் மற்றும் ஆன்லைனில் அதிவேகமாக மருந்துகளை டெலிவரி செய்யும் செயலிகளின் அசுர வளர்ச்சியே இந்த போராட்டத்திற்கு முதன்மைக் காரணமாகும்.

ஆன்லைன் நிறுவனங்கள் எந்தவித முறையான கட்டுப்பாடுகளும் இன்றி, விதிகளை மீறிச் செயல்படுவதாகச் சில்லறை மருந்துக்கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆன்லைன் தளங்களில் மருத்துவர்களின் தகுதிவாய்ந்த சீட்டுகள் சரியாகச் சரிபார்க்கப்படுவதில்லை என்றும், சில நேரங்களில் போலிச் சீட்டுகள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சீட்டுகளைப் பயன்படுத்தி தவறான மருந்துகள் விநியோகிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கார்ப்பரேட் vs சில்லறை வர்த்தகம்
ஆன்லைன் நிறுவனங்கள் பெரும் கார்ப்பரேட் முதலீடுகளுடன் இயங்குவதால், மருந்துகளுக்கு 50% வரை அதிரடித் தள்ளுபடிகளை வழங்குகின்றன. சாதாரணப் பாரம்பரிய மருந்துக்கடைகளால் இத்தகைய தள்ளுபடிகளைத் தர முடியாது என்பதால், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் மருந்தகங்கள் மட்டுமே நோயாளிகளுக்கு அவசரக் கால உதவி, மருந்துகள் குறித்த நேரடி வழிகாட்டுதல் மற்றும் கடனுதவி போன்ற சேவைகளை வழங்குகின்றன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த இரண்டு முக்கிய விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தித்தான் இ-பார்மசிகள் இயங்குவதாகக் கூறி, அவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக் மருந்தக உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2 முக்கிய சட்டங்கள்
GSR 220(E): கொரோனா பேரிடர் காலத்தில், அவசரத் தேவைக்காகப் பதிவு செய்யப்பட்ட மருந்தகங்கள் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்க இந்த விதி தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் நிறுவனங்கள் இதையே ஒரு சட்ட ஓட்டையாகப் பயன்படுத்திப் பெரிய அளவில் வணிகம் செய்கின்றன.
GSR 817(E): இ-பார்மசிகளை முறைப்படுத்தக் கொண்டு வரப்பட்ட இந்த வரைவுச் சட்டம், பல ஆண்டுகளாக முழுமையாகச் யல்படுத்தப்படாமலும் அல்லது ரத்து செய்யப்படாமலும் அப்படியே உள்ளதால், ஆன்லைன் நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கி வருகின்றன என்று மருந்தகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தமிழ்நாட்டின் நிலைமை என்ன?
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஸ்டிரைக் பாதிப்பு இருக்காது என்று அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் 5000க்கும் அதிகமான மெடிக்கல் ஷாப்கள் திறந்திருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் மாநிலம் முழுவதும் பரவலாக மெடிக்கல் ஷாப்கள் இன்று மூடப்பட்டிருக்கின்றன. உள் மாவட்டங்களிலும் மெடிக்கல் ஷாப்கள் இன்று அடைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications