கர்ப்பிணி பெண் உறவுக்கு மறுப்பது கொடுமையாகாது..கணவருக்கு குடும்ப நல கோர்ட் குட்டு
கர்ப்பிணிப் பெண் கணவனிடம் உறவுக்கு மறுப்பது கொடுமையான ஒன்றல்ல என்று டெல்லி குடும்ப நல கோர்ட் கூறியுள்ளது.
டெல்லி: கர்ப்பிணிப் பெண் படுத்துக் கொண்டே டீ கேட்பது சோம்பேறித்தனம் என்றும் கணவன் உறவுக்கு அழைக்கும் போது மறுப்பது கொடுமையல்ல என்றும் டெல்லி குடும்ப நல கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இதற்காகவெல்லாம் விவாகரத்து கொடுக்க முடியாது என்றும் கோர்ட் கூறியுள்ளது.
டெல்லியில் வசித்து வரும் ஒருவர், தனது மனைவி உறவுக்கு மறுப்பதாகவும், காலையில் படுக்கையில் இருந்து தாமதமாக எழுந்திருப்பதோடு, படுக்கையில் இருந்தவாறு டீ கேட்பதாகவும் குற்றம்சாட்டி, தன் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வளாகத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பிரதீப் நந்தரஜோக் மற்றும் நீதிபதி பிரதிபா ராணி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர் மனைவி மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படை இல்லை என்று கூறி மனுவை நிராகரித்தது.
மேலும், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் கணவன் உறவுக்கு அழைக்கும் போது மறுப்பது கொடுமையான விஷயமல்ல என்று கூறி விவகாரத்திற்கு அளிப்பதற்கு அடிப்படையற்ற வழக்கு என்று கூறி நிராகரித்தனர்.
மேலும், படுக்கையில் இருந்தவாறு டீ கேட்பது அந்தப் பெண்ணின் சோம்பேறித்தனத்தைக காட்டுகிறது என்றும், அதுவும் ஒரு கொடுமையான செயல் அல்ல என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.