குடிப்பதற்கு பணம் தரவில்லை... அண்ணன் மூக்கைக் கடித்துத் துப்பிய தம்பி.. தாய், தந்தை மீதும் தாக்குதல்
பணம் தராத அண்ணனின் மூக்கை கடித்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த அண்ணனின் மூக்கை கடித்துத் துப்பிய தம்பியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கனூஜ் மாவட்டத்தில் உள்ள ராம்லால்பூர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது அண்ணன் சோப்ரான். மது போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அண்ணன் தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று மது குடிப்பதற்கு அண்ணனிடம் பணம் கேட்டுள்ளார் ஸ்ரீகாந்த். அவர் தர மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், சோப்ரானின் மூக்கை கடித்துத் துப்பியுள்ளார். பின்னர் அவர் சோப்ரானின் கை மற்றும் வயிறு போன்ற இடங்களையும் கடித்துள்ளார். சண்டையைத் தடுக்க வந்த குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தாரையும் ஸ்ரீகாந்த் தாக்கியுள்ளார்.
மூக்கில் காயமடைந்ததால் சோப்ரானுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மயக்கமடைந்த அவரை உடனடியாக குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், ஸ்ரீகாந்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்த சம்பவம் குறித்து சோப்ரான் கூறுகையில், “ஸ்ரீகாந்த் என்னையும், என் தந்தையும் அடித்தார். பணம் கேட்டார் நான் கொடுக்கவில்லை உடனே என் மூக்கை கடித்துவிட்டார். பின்னர் என் கை மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் அவர் கடித்தார். தடுக்க வந்த எனது தாய் மற்று மாமாவையும் தாக்கினார். குடிப்பழக்கம் அவனை அடிமையாக்கிவிட்டது” என வேதனை தெரிவித்துள்ளார்.
இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், நடந்த சம்பவம் எதுவுமே ஸ்ரீகாந்திற்கு நினைவில் இல்லை. காரணம் அப்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார். போலீசாரின் விசாரணையில் அவர், “குடும்பத்திற்குள் அவர்களாக சண்டை போட்டுக் கொண்டனர். எனக்கு எதுவும் நினைவில் இல்லை” எனக் கூறியுள்ளார்.
காயமடைந்த சோப்ரானின் மருத்துவ அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அதன்பிறகே ஸ்ரீகாந்தின் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.