ஒலிம்பிக்கில் சாதித்தது ஓ.கே.. இந்தியாவில் பெண்கள் நிலை எப்படி உள்ளது? தோலுரிக்கும் புள்ளி விவரம்
டெல்லி: ஒலிம்பிக்கில் ஆண்களை விஞ்சி பெண் வீராங்கனைகள் சாதித்து காட்டிவிட்டனர். ஆனால், நிஜத்தில் நமது நாட்டில் பெண்கள் நிலைமை, ஒலிம்பிக் பிம்பத்திற்கு ஈடாக முன்னேறியுள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது.
இந்தியா ஸ்பென்ட் அமைப்பு நடத்திய புள்ளி விவர ஒப்பீட்டு ஆய்வு இதை அம்பலப்படுத்துகிறது. பிரிஸ்க் நாடுகளிலேயே, இந்தியாவில்தான், பணியாற்றும் பெண்கள் எண்ணிக்கை குறைவாகும்.
பக்ரைனில் 39 சதவீதம், மலேசியாவில் 45 சதவீதம், சோமாலியாவில் 37 சதவீதம் பெண்கள் பணிக்கு செல்வோராக உள்ளனர். இந்தியாவில், இந்த எண்ணிக்கை 26 சதவீதமாகத்தான் உள்ளது. 2013 பணியாளர் துறை புள்ளி விவரம் இதை உறுதி செய்கிறது.
உயர் கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை 2007ல் 39 சதவீதமாக இருந்த நிலையில் அது 2014ல் 46 சதவீதமாக உயர்ந்தது. ஆனாலும் மேலே குறிப்பிட்டபடி, பணிக்கு செல்லும் பெண்கள் வீதம் குறைவாகத்தான் உள்ளது.
2010-12ல் சராசரியாக, 10 லட்சம் பேரில் 167 பெண்கள் பேறு கால நேரத்தில் உயிரிழந்தனர். ஆனால் இலங்கையில் இது 30 மட்டுமே. பூடானில் 148ஆகவும், கம்போடியாவில் 161ஆகவும் உள்ளது. ரஷ்யாவில் 25, சீனாவில் 27, பிரேசிலில் 44, தென் ஆப்பிரிக்காவில் 138 என்ற அளவில் உள்ளது.
இந்த விஷயத்தில் இந்தியா முன்னேறியிருந்தாலும், ஏழை நாடுகளைவிடவும் பின்தங்கியே உள்ளது கவனிக்கத்தக்கது.
1990ல் இந்திய பெண்களின் சராசரி திருமண வயது 19.3 என்ற அளவில் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி இது 21.2 என்ற அளவுக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும் சுமார் 12 மில்லியன் குழந்தைகள் 10 வயதுக்கு முன்பே மணம் முடித்து வைக்கப்படுகிறார்கள். அதில் 65 சதவீதம் பேர் பெண் குழந்தைகளாகும்.
1961ல் ஆயிரம் ஆண்ககளுக்கு 976 பெண்கள் இருந்த நிலை மாறி, தற்போது 919 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. பெண் சிசுக்களை கரு கலைப்பு செய்வது போன்ற செயல்பாடுகள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
எப்படி பார்த்தாலும், நாட்டில் பெண்கள் நிலை மோசமாகிக்கொண்டே போகிறதே தவிர முன்னேறவில்லை. ஒலிம்பிக்கின் பிரம்மையில், நிஜத்தை நாம் மறக்க முடியாது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் நமக்கு சொல்கின்றன.