சிவன் கோயிலில் உயிருடன் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! இதென்ன புதுசா இருக்கே? என்ன காரணம்?
சூரத்: குஜராத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாக செலுத்தி வழிபடுகிறார்கள்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ளது ராம்நாத் சிவ் கேலா எனும் சிவன் கோயில். இது பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாக அளிப்பது வழக்கம்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சங்கராந்தி நாளிலிருந்து நண்டு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு கடந்த ஞாயிறு முதல் சிவனுக்கு நண்டுகளைக் காணிக்கையாக வழங்கத் தொடங்கியுள்ளார்கள்.

நண்டுகள்
உயிருடன் இருக்கும் நண்டுகளை கொண்டு வந்து சிவனுக்கு காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த காணிக்கை எதற்காக என கோயில் நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், இப்படி உயிருடன் நண்டை கொண்டு வந்து கொடுப்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காது கேளாமை
குறிப்பாக காது கேளாமை, காது வலி இருப்போர், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் இந்த காணிக்கையை செலுத்தினால் நோய்கள் குணமாகும் என நம்புகிறார்கள். இந்த கோயில் குறித்து இதிகாசமான ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ராமரே இந்தக் கோயிலை கட்டினாராம்.

புராண காலம்
புராண காலத்தில் இந்த கோயிலில் ஏகாதசி நன்னாளில் நண்டுகளை வைத்து வழிபடும் அனைவருக்கும் நினைத்த காரியம் நடந்து நன்மை உண்டாகும் என அருளினார். மேலும் நண்டுகளை வைத்து வழிப்பட்டால் தங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறி, நல்வாழ்வு வாழலாம் என நம்புகின்றனர் என்றனர்.

நண்டு அர்ச்சனை
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் நண்டு அர்ச்சனை செய்தவர்களின் உடல்நலக் குறைபாடுகள் குணமானதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் எனக்கு இருக்கும் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்யலாம் என வந்திருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை நண்டு காணிக்கை செலுத்தப்படுகிறது. இங்கு நண்டுகளைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபடுவதால் குழந்தைகளுக்கு காது வலி வராது என நம்புவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

பூக்கள் , பழங்கள்
பொதுவாக கோயில்களில் பூக்கள், பழங்கள், அபிஷேகத்திற்கு பால், அர்ச்சனைக்கு தேங்காய்கள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்குவதுதான் வாடிக்கையாக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த கோயிலில் பொங்கல் பண்டிகை அன்று உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பழக்கம் காலம் காலமாக தொன்று தொட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications