கோர்ட் உத்தரவு.. இன்டர்சிட்டி ரயிலை நடு வழியில் நிறுத்தி ஜப்தி செய்த அதிகாரிகள்! பயணிகள் அதிர்ச்சி
பெங்களூர்: விவசாயிகளுக்கு நிலத்திற்கான இழப்பீடு தர தாமதம் செய்த ரயில்வே துறைக்கு எதிராக சாட்டையை வீசிய கோர்ட், ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிகரே-கொட்டூர் நகரத்தின் நடுவே ரயில்வே பாதை அமைக்கும் பணியின்போது, விவசாயிகளிடமிருந்து ரயில்வே துறை நிலம் கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக சிவகுமார் என்ற விவசாயிக்கு ரூ.37 லட்சத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 2 வருடங்களாக இந்த இழப்பீடு தொகையை வழங்கவில்லை ரயில்வே துறை.

இதை எதிர்த்து சிவகுமார் கோர்ட் உதவியை நாடினார். வழக்கை விசாரித்த ஹரிகரே நகர கோர்ட், தார்வார்-மைசூர் இன்டர்சிட்டி ரயிலை ஜப்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இரு தினங்கள் முன்பு ஜப்தி நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
தார்வாரிலிருந்து, ஹரிகரேவுக்கு காலை 8 மணிக்கு இந்த ரயில் வந்தபோது அதிகாரிகள், அதற்கு மேல் ரயிலை நகர விடாமல் தடுத்துவிட்டனர். ரயில் பைலட்டை கீழே இறக்கிவிட்டனர். சுமார் 1 மணி நேரமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
இதனிடையே, ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்குவதாக, ரயில்வே மேலாண் இயக்குநர் உறுதியளித்த பிறகு ரயில் இயக்கப்பட்டது. ரயிலையே ஜப்தி செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications