ராஞ்சியில் நம்பர் பிளேட் இல்லாமல் புல்லட் ஓட்டிய டோணிக்கு ரூ.500 அபராதம்
ராஞ்சி: போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி கடந்த திங்கட்கிழமை புல்லட் ஓட்டியுள்ளார். பாதுகாவலர்கள் இன்றி அவர் தனியாக சுமார் 3 மணிநேரம் புல்லட் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவரது வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததை பார்த்த போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். அதற்குரிய சலானை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இரு சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் டோணியின் வாகனத்தில் முன்புறத்தில் ஒரு ஓரமாக பதிவு எண் எழுதப்பட்டிருந்தது. பதிவு செய்யப்படாத நம்பர்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் செல்வோரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள வேளையில் டோணி சிக்கியுள்ளார்.
இது குறித்து போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்திக் கூறுகையில்,
நாங்கள் டோணியின் வீட்டிற்கு சலான் அனுப்பி வைத்தோம். அவரது குடும்பத்தார் அபராதத் தொகையை செலுத்திவிட்டனர். அவர் தெரியாமல் விதிகளை மீறிவிட்டார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்றார்.