இந்தியாவுக்கு மோடி பாணி சர்வாதிகாரம் தேவை: சொல்வது பாஜகவின் பரேஷ் ராவல்
அகமதாபாத்: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் "சர்வாதிகாரி" யாக விமர்சித்து வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவலோ அதை நியாயப்படுத்தி பேசி புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகரான பரேஷ் ராவல்தான் அகமதாபாத் லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளர். இத்தொகுதியில் ஏழு முறை எம்.பி.யாக இருந்த ஹரீன் பாதக்குக்குப் பதிலாக இம்முறை பரேஷ் ராவலை நிறுத்தியிருக்கிறது பாஜக. அவர்தான் மோடி குறித்த திரைப்படம் ஒன்றில் மோடியாக நடிக்கவும் இருக்கிறார்.
நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் சர்வாதிகாரி என விமர்சிப்பது குறித்து கருத்து தெரிவித்த பரேஷ் ராவல், மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு அதிகார மையம்தான். அவர்தான் அரசின் பெரும்பகுதியை வழிநடத்திச் செல்கிறவர். அதனால்தான் மற்றவர்கள் அவரை சர்வாதிகாரி என விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் மக்களைப் பற்றி சிந்திக்கிற, மக்கள் நலனுக்காக செயலாற்றுகிற, அவர்களது தேவைகளைப் புரிந்து கொள்கிற அத்தகைய சர்வாதிகாரிகள்தான் நமக்குத் தேவை என்பது என் கருத்து.
நரேந்திர மோடி, கூட்டணி அரசின் பிரதமராக இருக்க மாட்டார். மோடிக்கென்று ஒரு தனி பாணி இருக்கிறது. அவர் அதில்தான் பயணிப்பார். ஆனால் கூட்டணி அரசாக இருந்தால் ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு திசையில் செல்ல சொல்வார்கள். அதனால் அவரால் செயல்பட முடியாது என்றார்.
முன்னதாக தமது அகமதாபாத் தொகுதி மக்களின் விருப்பமும் என் விருப்பமுமே மோடியை நாட்டின் பிரதமராக்குவது மட்டுமே என்றும் கூறியிருந்தார் பரேஷ் ராவல்.












Click it and Unblock the Notifications