அம்ரிதா ராயுடன் திக்விஜய் சிங் திருமணம் நிறுத்தம்?: பின்னணியில் சாமியார்??
டெல்லி: டிவி தொகுப்பாளினியை இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தற்போது அந்த முடிவை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்ரிதா ராயுடன் காதல்... டுவிட்டரில் அறிவிப்பு...
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் (67) முதல் மனைவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மரணமடைந்தார். இதனிடையே திக்விஜய்சிங்கிற்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி அம்ரிதா ராய் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. அம்ரித்தா ராய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துக்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் கடந்த மாதம் 30ம் தேதி திக்விஜய்சிங் அறிவித்தார்.

டுவிட்டரிலேயே கடும் எதிர்ப்பு:
இதையடுத்து பெரும்பாலானோர் டுவிட்டரிலேயே திக்விஜய்சிங்கிற்கு கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பதிவு செய்தனர். திக்விஜய்சிங்கின் தம்பி மனைவியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரம் எம்.எல்.ஏவாக உள்ள மகன் ஜெய்விந்தர்சிங் தந்தையின் திருமண முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

சுவரூபானந்தா சரஸ்வதி சுவாமிஜி ஆசி வழங்க மறுப்பு?
இந்நிலையில், திக்விஜய்சிங் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக மத்திய பிரதேச உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திக்விஜய்சிங் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர். தனது 2வது திருமணத்திற்கு ஆசி பெறுவதற்காக ஆன்மீக குருவான கங்கா ஆசிரமத்தின் சுவரூபானந்தா சரஸ்வதி சுவாமிஜியை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் சுவாமிஜியோ, திக்விஜய்சிங்கிற்கு ஆசி வழங்க மறுத்துவிட்டாராம்.

திக்விஜய்சிங் மறுபரிசீலனை?
உலக நன்மையை கருதிதான் ஆசி வழங்க முடியுமே தவிர, மக்களின் நலனுக்கு எதிராக விஷயங்களுக்கு ஆசி வழங்க முடியாது என்று திக்விஜய் சிங்கை திருப்பி அனுப்பி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் 2வது திருமணம் செய்யும் முடிவை திக்விஜய்சிங் மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications