அம்ரிதா ராயை மணம் புரிந்தார் திக்விஜய் சிங்... சென்னையில் திருமணம் நடந்ததாக தகவல்
டெல்லி: தான் காதலித்து வந்த 44 வயதான முன்னாள் டிவி பத்திரிகையாளர் அம்ரிதா ராயை, காங்கிரஸ் பொதுச் செயலாளருமான 68 வயது திக்விஜய் சிங் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த மாதம் சென்னையில் வைத்து இந்தத் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் இவர்களது ரகசிய உறவும், அந்தரங்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து தங்களுக்குள் இருக்கும் உறவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்புக் கொண்டார் திக்விஜய் சிங்.
இந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் சென்னையில் வைத்து ரகசியமான முறையில் மணம் புரிந்து கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது திக்விஜய் சிங் அமெரிக்காவுக்குப் போயுள்ளார். அவரது தரப்பினர் இந்தத் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேசமயம், அம்ரிதா ராய் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அவர் ராஜ்யசபா டிவியில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது விடுப்பில் இருப்பதாக ராஜ்யசபா டிவி அலுவகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிட்டரில் தனது உறவை ஒத்துக் கொண்ட திக்விஜய் சிங், அம்ரிதா ராயும், அவரது கணவரும் ஏற்கனவே பரஸ்பரம் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். விவாகரத்து முடிவுக்கு வந்ததும் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அம்ரிதா ராய் வெளியிட்டிருந்த டிவிட்டில், நானும் எனது கணவரும் பிரிந்து விட்டோம். விவாகரத்து கோரியுள்ளோம். அது இறுதியானதும் திக்விஜய் சிங்கை மணப்பது குறித்து முடிவெடுப்பேன் என்று கூறியிருந்தார்.
திக்விஜய் சிங்கின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்தத் தம்பதிக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.