நாகலாந்து கலவரம்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி- கலெக்டர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட்
திமாபூர்: நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மாவட்ட ஆட்சியர் உள்பட 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகாலாந்தின் திமாபூரில் வசித்து வந்தவர் சையத் பரீத்கான் (வயது 35). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்த அவர், நாகா பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட பரீத்கான், விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பொதுமக்கள் ஆத்திரம்
இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆத்திரம் தணியாத பொதுமக்கள், பாதுகாப்பையும் மீறி சிறையை உடைத்து பரீத்கானை வெளியில் இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கினர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய பிறகே அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
போலீஸ் துப்பாக்கிச்சூடு
இந்த தாக்குதலில் பரீத்கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீஸ் துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்திய அரசு உத்தரவு
இதனிடையே, தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு நாகாலந்து அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உயிரிழந்த ஃபரீத் கான், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுவதால், அங்கு அசம்பாவிதம் நிகழாமல் இருக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு அஸ்ஸாம் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
மூவர் சஸ்பெண்ட்
இதனையடுத்து மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்த தவறியதால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, மத்திய சிறை சூப்பிரெண்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, முதல்வர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அனைவரும் கைது
ஃபரீத் கான் தாக்கப்பட்ட சம்பவத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்த தவறியதாக, மத்திய சிறை கண்காணிப்பாளர் சுபா போம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மெரன் ஜாமிர், மாவட்ட ஆட்சியர் வஜோப் கென்யி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
விசாரணை ஆணையம்
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வெப்ரசா நைகா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் உத்தரவிட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
கலவரத்தை தடுக்க
இதனிடையே நாகாலாந்தில் கொல்லப்பட்டவர் அஸ்ஸாம் மாநில இளைஞர் என்பதால் இருமாநில மக்களிடையே கலவரம் ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
தருண் கோகோய் கண்டனம்:
இந்நிலையில், அஸ்ஸாம் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வர் தருண் கோகோய் கண்டனம் தெரிவித்தார். இதேபோல், இந்தச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ரூதின் அஜ்மல் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications