சர்ச்சைக்குரிய இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி தேவ்யானி கோப்ரகடே திடீர் பணி நீக்கம்!
டெல்லி: குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதை மறைத்த சர்ச்சைக்குரிய அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே, அமைச்சகப் பணியில் நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றியவர் தேவ்யானி கோப்ரகடே. அப்போது, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதா என்பவரை கொடுமைப்படுத்தி வேலை வாங்கியதாக அந்த பெண் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, விசா மோசடி வழக்கும் தேவ்யானி மீது சேர்ந்து கொண்டது. அந்த வழக்கில் தேவ்யானி கைது செய்யப்பட்டு, ஆடை களைந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இவ்வழக்கில், தேவ்யானி ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் இந்தியா திரும்பினார். அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேவ்யானி அண்மையில் தனது தந்தை மீதான ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், தனது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பது குறித்தும் கடந்தவாரம் என்டிடிவி ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதுகுறித்து அறிந்த வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் ஊடகத்திற்கு பேட்டியளித்தது மற்றும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும், அமெரிக்க குடியுரிமை பெறப்பட்டதை இதுவரை அமைச்சகத்திடம் தெரிவிக்காமல் மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக அவர் இப்போது வகித்து வந்த கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர்மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications