விசாரணை முடியும் வரை, முதல்வராக ஜெ. பதவி வகிக்க தடை விதிக்க கோரும் கர்நாடகம்!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை முடிவடையும்வரை, ஜெயலலிதாவை தமிழக முதல்வராக பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், விசாரணையின் இறுதியில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும் இரு கோரிக்கைகள், கர்நாடக தரப்பால், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் கோரப்பட்டுள்ளன.

தகவல்கள்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சுமார் 2400 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தபடி உள்ளன.

முதலில் முதல்வர் பதவி
ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை பறிக்க வேண்டும் என்று அப்பீல் மனுவில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இறுதி செய்யுங்கள், அதுவரை, ஜெயலலிதா முதல்வராக பதவியில் தொடர கூடாது என்று உத்தரவிடுங்கள் என்று கேட்கிறது அந்த மனு.

தண்டனை
மனுவிலுள்ள முக்கிய அம்சங்கள்: ஜெயலலிதா உள்ளிட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் அவர்கள் தண்டனைக்குள்ளாகினர். ஆனால் ஹைகோர்ட் இந்த நால்வரையும் விடுதலை செய்துள்ளது.

தப்புகள்
ஹைகோர்ட் தீர்ப்பில் ஏகப்பட்ட லாஜிக் தப்புகள், கணித தவறுகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையாகியுள்ளதை ஏற்க முடியாது. பெங்களூர் நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. எனவே, சட்டப்படி, அவர் முதல்வர் போன்ற பொது பதவிகளை வகிக்க முடியாதவராகிவிடுகிறார். ஹைகோர்ட் தீர்ப்பால்தான் அவர் முதல்வராக முடிந்தது.

பதவி பறிப்பு
எனவே, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்ட, ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து இறங்க உத்தரவிட வேண்டும். விசாரணையின் முடிவில், கீழ்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனு கேட்டுக்கொண்டுள்ளது. கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பு கோரிக்கை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications