ஒடிஷாவில் தாலி கட்ட சில மணிநேரத்திற்கு முன்பு மணப்பெண், காதலன் குத்திக் கொலை
பெஹ்ராம்பூர்: ஒடிஷாவில் திருமணத்தன்று 20 வயது மணப்பெண்ணும், அவரது காதலனும் கொலை செய்யப்பட்டனர்.
ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெஹ்ராம்பூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் ஹலாதியபதரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபரை காதலித்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டில் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் மே 11ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்தையொட்டி நேற்று இரவு மணப்பெண்ணின் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது. விருந்துக்கு அந்த பெண்ணின் காதலனின் குடும்பத்தாரும் அழைக்கப்பட்டனர்.
நள்ளிரவில் விருந்து முடிந்தபோது மணப்பெண் தனது காதலனுடன் சேர்ந்து அவரது வீட்டுக்கு சென்றுவிட்டார். இது குறித்து அறிந்த மணப்பெண்ணின் சகோதரர்கள் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று தங்கள் சகோதரியை வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அந்த பெண் வர மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த பெண்ணையும், அவரது காதலனையும் அவர்கள் குத்திக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே மணப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications