எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற ஆம் ஆத்மி.. ஏன் தெரியுமா?
டெல்லி: டெல்லியில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரச்சினையில், புதிய மனுவை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இரட்டை பதவி வகித்தது தொடர்பான குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 டெல்லி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த எம்எல்ஏக்கள் 2015-ம் ஆண்டு மார்ச் 13ம் தேதியில் இருந்து, 2016 செப்டம்பர் 8 வரை ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வரும் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 19ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது இருந்தது.

ஹைகோர்ட்டில் வழக்கு
முன்னதாக, தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு இடைக் கால தடை விதிக்க வேண்டும் என கூறி டெல்லி ஹைகோர்ட்டில் ஆம் ஆத்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஹைகோர்ட் எந்த முடிவும் எடுக்கும் முன்பே குடியரசு தலைவர், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்.

காரணம் இதுதான்
இதையடுத்து, ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை ஆம் ஆத்மி கட்சி இன்று திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. அந்த மனுவிற்கு இனியும் மதிப்பு இல்லை என்பதால், வாபஸ் பெற முடிவு செய்ததாக டெல்லி ஹைகோர்ட்டில் ஆம் ஆத்மி தரப்பு தெரிவித்தது.

புதிய மனு
அதேநேரம், குடியரசு தலைவரின் உத்தரவை பரிசீலனை செய்ய வலியுறுத்தி புதிய மனுவை டெல்லி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. குடியரசு தலைவர் நாட்டின் உயரிய பதவியில் உள்ளவர் என்பதால், அவரது உத்தரவு வெளியான பிறகு தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு எதிரான வழக்கிற்கு வேலை இல்லை என்பதே சட்ட வல்லுநர்கள் பார்வை.

கேஜ்ரிவால் கொந்தளிப்பு
20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய குடியரசு தலைவர் உத்தரவிட்டது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது, ஒருதலைபட்சமான முடிவு என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications