ஜெ. விடுதலையை எதிர்க்கும் அப்பீல்- திருத்தப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது தி.மு.க.!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திருத்தப்பட்ட புதிய அப்பீல் மனுவை தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி குமாரசாமியின் உத்தரவில் கணக்குப்பிழை இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆனால் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள் இருந்ததை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது. இதையடுத்து, கர்நாடக அரசு திருத்தப்பட்ட புதிய மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தது.
இதேபோல் தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் தாக்கல் செய்த மனுவிலும் சில குறைப்பாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியிருந்தது. இதையடுத்து திருத்தப்பட்ட புதிய அப்பீல் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.