11 ஆண்டுகளாக தங்கையை பலாத்காரம் செய்த டாக்டர் கைது
குர்காவ்ன்: ஹரியானா மாநிலத்தில் தங்கையை 11 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் குர்காவ்ன் மாவட்டத்தில் உள்ள மானேசரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 33 வயது மருத்துவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள். அந்த மருத்துவர் தனது சகோதரிகளில் ஒருவரை 2005ம் ஆண்டு அந்த பெண் ப்ளஸ் 2 படித்த போதில் இருந்து 11 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதை வெளியே கூறினால் குடும்ப பெயர் கெட்டுவிடும் என்பதால் அப்பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் மருத்துவருடன் தங்கியிருக்கும் தாயை பார்க்க அப்பெண் நேற்று முன்தினம் மானேசர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் தங்கையை மீண்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையடுத்து இத்தனை ஆண்டுகளாக நடந்தவற்றை எல்லாம் பெற்றோர் மற்றும் சகோதரிகளிடம் அப்பெண் தெரிவித்தார். பின்னர் நேற்று மானேசர் காவல் நிலையத்திலும் தனது சகோதரர் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவரை கைது செய்தனர்.