தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்.. உத்தர பிரதேச பள்ளிகளுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை!
உத்தர பிரதேசத்தின் 'அலிகார்' பகுதியில் இருக்கும் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேசத்தின் 'அலிகார்' பகுதியில் இருக்கும் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. 'தி ஹிந்து ஜக்ரான் மார்ச்' என்ற அந்த அமைப்பு பள்ளிகளுக்கு இதுகுறித்து கடிதம் எழுதி இருக்கிறது.
இந்த கடிதத்தில் தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் நடத்தி பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கடிதம் பள்ளிகளுக்கு மட்டும் இல்லாமல் சில கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவம் தற்போது உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எச்சரிக்கையால் சில பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
எச்சரிக்கை கடிதம்
உத்தர பிரதேசத்தில் 'தி ஹிந்து ஜக்ரான் மார்ச்' என்ற அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. விஸ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் துணை அமைப்பான இது தற்போது 'அலிகார்' நகரத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பு இருக்கிறது. அதில் எந்த கல்வி நிறுவனமும் இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறது.
மோசமான மிரட்டல்
மேலும் இந்த கடிதத்தில் ''உங்களுக்கு தைரியம் இருந்தால் தாராளமாக கிறிஸ்துமஸ் பண்டிகை நடத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களது பள்ளிக்கும் கல்லூரிக்கும் ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.'' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்த கடிதத்திற்கு பின்பும் நடந்தால் கண்டிப்பாக பெரிய பிரச்சனை வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கிறிஸ்துவ அமைப்புகள்
இந்த கடிதம் மிக முக்கியமாக கிறிஸ்துவ பள்ளிகளை குறிவைத்து அனுப்பப்பட்டு இருக்கிறது. ''இந்த கடிதம் எவ்வளவு சீக்கிரம் அவர்களை அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களை அடைய வேண்டும். எந்த பள்ளியும் அந்நிய நாட்டு விழாக்களை இந்த பூமியில் கொண்டாட கூடாது. இந்த கடிதம் அவர்களுக்கு பெரிய எச்சரிக்கை மணி'' என்று அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டு உள்ளார்.
விளக்கம் அளித்த பள்ளிகள்
தற்போது இந்த கடிதம் குறித்து பள்ளிகள் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் ''இதுபோன்ற கடிதங்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் எல்லா மத விழாக்களையும் கொண்டாடுகிறோம். நாங்கள் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். சில பள்ளிகள் பயந்து இருக்கின்றது. அவர்களிடமும் நாங்கள் பேசுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.