தொடக்கத்திலேயே மோடி அரசிடமிருந்து அதிசயத்தை எதிர்பார்க்காதீர்கள்...: கோவா முதல்வர்
பனாஜி: ஆட்சியின் தொடக்கத்திலேயே மோடி அரசிடமிருந்து அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்.
தலைநகர் பனாஜியில் கோவா மாநில தொழிலதிபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர். அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் பெருமளவில் என்னைப் பார்த்து கேட்கையில், நல்ல நாட்கள் வந்திருக்கவேண்டும், ஆனால் அவை வந்துவிட்டதா என்றார்கள். அதற்கு நான் பதிலளிக்கையில் வரவில்லை, கண்டிப்பாக நல்ல நாட்கள் வரும் என்றேன்.
கடந்த இரண்டு வருட காலமாக மத்திய அரசின் வேறுபட்ட யோசனைகளால் வாய் திறக்க முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், மத்திய மாநில அரசுகள் தற்போது இணைந்து செயலாற்ற முடியும்.
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஒரு மாதமே ஆகிறது. தொடக்கத்திலேயெ மோடி அரசிடம் இருந்து அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள்.
கோவாவிற்கு மோடி வந்தபோது உங்கள் மாநிலத்திற்கு என்ன செய்யவேண்டும் என்று என்னிடம் கேட்டார். ஆனால் நான் நமது மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என அவரிடம் கேட்கவில்லை. அவ்வாறு கேட்காததற்கு பலர் விமர்சனம் செய்தனர்.
ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் இம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.