கறுப்பு பிலிம் ஒட்டிய காருடன் காவல்துறை அலுவலகம் வந்த கன்னட நடிகர் விஜய்க்கு அபராதம்!
பெங்களூரு: கன்னட முன்னணி நடிகரான 'துனியா' விஜய் தனது காரில் கறுப்பு வண்ண சூரிய தடுப்பு பிலிம்களை ஒட்டியிருந்ததற்காக, பெங்களூரு போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர். அந்த பிலிம்களையும் அகற்றினர்.
கன்னட நடிகரான விஜய், துனியா என்ற படத்தின் மூலம் புகழடைந்தார். எனவே துனியா விஜய் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறார். இந்நிலையில் திரைப்பட வினியோகஸ்தர் ஜெயண்ணா என்பவர், விஜய் தன்னை மிரட்டியதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, மைசூரு சாலையிலுள்ள சிசிபி போலீஸ் கிளை அலுவலகத்திற்கு துனியா விஜய் வரவழைக்கப்பட்டார். விஜய் தனது ஆடம்பர ரேஞ்ச் ரோவர் காரில் போலீஸ் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அப்போது, சிசிபி போலீஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த டிராபிக் போலீஸ்காரர்கள், விஜய் காரின் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கறுப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தனர். காருக்குள் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும் அளவுக்கு கறுப்பு பிலிம்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டுமே தவிர அதைவிட அடர்த்தியாக ஒட்டப்பட கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு என்பதால், விஜய்க்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளனர் போலீசார்.
அதுமட்டுமின்றி காரில் இருந்த கறுப்பு பிலிம்களையும் போலீசார் அகற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications