பீகார் துர்க்கா கோயிலில் 101 வருடங்களாக அணையாமல் எரியும் தீபம்
பாட்னா: பீகாரில் உள்ள துர்க்கா பரமேஸ்வரி கோயில் ஒன்றில் 101 ஆண்டுகளாக, தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டுள்ளது.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், உள்ளது அகண்ட்வாஷினி கோயில். இங்கு, துர்க்கா தேவி முக்கிய தெய்வம். 1914ம் ஆண்டு ஜூன் மாதம் அசாமில் இருந்து ஒரு தீபத்தை கொண்டுவந்து துர்க்கா தேவி சிலை முன்பு தீபமேற்றி வைத்தனர். இன்று வரை அந்த தீபம் சுடரொளியுடன் எரிந்து கொண்டுள்ளது.
தற்போது இந்த கோயிலின் பூஜாரியாக இருப்பவர் பசுகினத் திவாரி. அவரது தாத்தா, விஸ்வநாத் திவாரிதான், இந்த தீபத்தை முதலில் ஏற்றியவராம். மூன்று தலைமுறைகளாக தீபத்தை அணையாமல் பார்த்துக்கொள்கின்றனர், கோயில் பூஜாரிகள்.
இதுகுறித்து பசுகினத் திவாரி கூறுகையில் "இந்த கோயிலில் அனைத்து ஜாதியினரும் வந்து கும்பிட்டுவிட்டுச் செல்லலாம். எனது தாத்தா காலத்தில் இருந்தே இங்கு ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது. அம்மன் அனைவருக்கும் சமமானவள் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். செவ்வாய் மற்றும் நவராத்திரி தினங்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்" என்றார்.
சொந்த செலவில் அல்லது உண்டியலில் சேரும் பணத்தை வைத்து கோயில் பராமரிப்பு, தீபத்துக்கான எண்ணை செலவை பூஜாரி குடும்பம் ஈடுகட்டிக்கொள்கிறது.