ஹாய் குட்டீஸ்.. கண்ணு தெரியுதா.. காது கேக்குதா.. ஓகே... நீங்க ஒன்னாப்பு சேரலாம்.. இது பெங்களூரில்!
பெங்களூர்: அடுத்த கல்வியாண்டில் இருந்து பெங்களூரில் முதல் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியரின் கண், காதுகளை பரிசோதனை செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இனி குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கையில் அவர்களின் கண் பார்வை மற்றும் காது கேட்கும் திறனை மருத்துவர்களிடம் சோதனை செய்து சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த விதிமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமமைச்சர் யு.டி. காதர் கூறுகையில்,
மாநில கண் சுகாதார கொள்கையின் ஒரு பகுதியாக அதற்கான நெறிமுறைகளை அரசு விரைவில் அறிவிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண் பார்வை, காது கேட்கும் திறனை பரிசோதித்து சான்றிதழ் அளிக்க வேண்டும்.
ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தியா கார்யகிரம் திட்டத்தின்கீழ் எங்களிடம் டாக்டர்கள் குழு உள்ளது. ஆனால் பரிசோதனை செய்ய போதிய உபகரணங்கள் இல்லை. விரைவில் உபகரணங்கள் வாங்கப்படும். அந்த கொள்கையின்படி கண், காதுகளை பரிசோதிப்பதுடன், ரத்த பரிசோதனையும் கட்டாயம் செய்ய வேண்டும் என்றார்.
மாநில கண் சுகாதார கொள்கையின்படி பிரபல கண் டாக்டர் கிருஷ்ண பிரசாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தான் கண், காது, ரத்த சோதனை உள்ளிட்ட 11 பரிந்துரைகளை அரசுக்கு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.