அசாமில் ஆட்சியை பிடித்தது பாஜக கூட்டணி! வடகிழக்கில் முதல் முறையாக பாஜக முத்திரை
கவுகாத்தி: அசாமில் 126 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது. மதியத்திற்குள் அக்கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றதாக டிரெண்டுகள் வர ஆரம்பித்தன.
அசாமில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. அதேபோல பாஜக, அசோம் கண பரிஷத், போடோ மக்கள் ஃபிரன்ட் ஆகிய கட்சிகள் இணைந்து களம் கண்டன.
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக ஃப்ரன்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக களம் கண்டன. மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கியது. பாஜக கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. போகப்போக இந்த இடைவெளி அதிகரித்தது.
காலை 11 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 70 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. மூன்றாவது அணி, 16 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பிறர் 8 தொகுதிகளில் முன்னிலை வகித்தனர்.
மாலை 6 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 66 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, 17 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 6 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது அணியினர் 9 தொகுதிகளை கைப்பற்றி 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். பிறர் 1 தொகுதியில் வெற்றியும், 2 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்தனர்.
வெற்றி பெற்றுவிட்ட நிலையில், பாஜக சார்பில் சரபானந்தா சோனோவால் முதல்வராக பதவியேற்க உள்ளார். வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக கால் பதிப்பது இதுதான் முதல்முறை என்பதால் அக்கட்சி தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 15 வருடங்கள் தொடந்து ஆட்சியில் இருந்த காங்கிரசை, பாஜக இம்முறை அகற்றியுள்ளது.
எக்ஸிட் போல், கருத்துக்கணிப்பில், அசாமில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications