பலாத்காரம் செய்யப்பட்டதால் கொல்கத்தா உணவகத்திற்குள் நுழைய பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
கொல்கத்தா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பதால் ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் கொல்கத்தாவில் இருக்கும் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் பார்க் தெருவில் 40 வயதான ஆங்கிலோ இந்திய பெண் கடந்த 2012ம் ஆண்டில் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள ஜிஞ்சர் என்ற பார் வசதி கொண்ட உணவகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அவரை உணவகத்திற்குள் நுழையவிடாமல் உணவக நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த பெண் கூறுகையில்,
நான் பலாத்காரம் செய்யப்பட்டவள் என்பதால் என்னை உணவகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர். நான் பலாத்காரம் செய்யப்பட்டது என் தவறா? நான் சாதாரணமாக வாழ முயற்சி செய்யக் கூடாதா என்றார்.
இது பற்றி உணவக உரிமையாளர் திப்தன் பானர்ஜி கூறுகையில்,
அவர் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பதால் அனுமதி மறுக்கவில்லை. அவர் ஏற்கனவே எங்கள் உணவகத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளார். அவர் குடித்துவிட்டு போதையில் பிரச்சனை செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால் தான் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றார்.
2 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடும் காரில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் மீது நீதிமன்றம் குற்றம்சாட்டியும் 3 பேர் மட்டும் தான் சிறையைில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகள் 2 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications